கரூர் மாவட்டத்தில் கோவில்களுடன் தொடர்புடைய இனாம் நிலங்கள் தொடர்பான நீண்டகால பிரச்சினை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு ஒருபுறம் விவாதங்களை கிளப்ப, அதைப் பாராட்டி காங்கிரசார் ஒட்டிய நன்றி போஸ்டர் மற்றொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மாவட்டத்தில் புகழிமலை பாலசுப்பிரமணியர், கல்யாண பசுபதீஸ்வரர், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் உள்ளிட்ட நான்கு கோவில்களுடன் இணைக்கப்பட்ட சுமார் 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்களின் பத்திரப்பதிவு தடையை நீக்க அறநிலையத் துறை உத்தரவிட்டது. 1963-ம் ஆண்டு மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி, இந்த நிலங்கள் பல கிராமங்களில் 471 சர்வே எண்களில் பரவியுள்ளன. சுமார் 3,390 பட்டாதாரர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.

இந்த உத்தரவு வெளியான சில நாட்களிலேயே, கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி பெயரில் நன்றி தெரிவிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், “கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலப் பிரச்சினையைத் தீர்த்து மக்களின் நீண்டகால கனவை நனவாக்கிய கர்த்தரின் தேவதூதராகிய முதல்வர் ஜோசப் விஜய்” என்றும், “கரூர் மக்களின் இதயங்களில் மாரியம்மனாக வாழும் எம்.பி. ஜோதிமணி” என்றும் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகங்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமூக வலைதளங்களில் போஸ்டரின் படங்கள் வேகமாகப் பரவி, ஆதரவு-எதிர்ப்பு விவாதங்களை தூண்டியுள்ளன.

பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இதை “இந்து சமய உணர்வுகளுக்கு எதிரான செயல்” என்று விமர்சித்துள்ளனர். மறுபுறம், சில தரப்பினர் இந்த நிலங்கள் உண்மையில் கோவில் சொத்துகள் அல்ல; இனாம் சட்டத்தின்படி மக்களுக்கு வழங்கப்பட்ட ரயத்துவாரி பட்டா நிலங்கள் என்று விளக்குகின்றனர். தவறுதலாக தடை விதிக்கப்பட்டதை நீக்கியதாகவும் அரசு தரப்பு கூறுகிறது. இந்த விவகாரம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்காக உள்ள நிலையில், இறுதி முடிவு நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version