காவிரியில் இருந்து நீர் திறப்பதில் ஒருபுறம் கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே நீண்ட காலமாக இழுபறி நீடித்து வரும் நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டில் இருந்து தண்ணீரை திறந்து விடக் கூடாது என கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தகராறு நிலவி வருகிறது.
அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழ்நாடு உயர்த்தினால் உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு பட்ஜெட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு கேரள மாநிலத்தின் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் மான்ஸ் ஜோசப், “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எந்த சூழலிலும் 142 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் கேரள அரசு உறுதியாக உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த கேரளா ஒருபோதும் அனுமதிக்காது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த மிகுந்த கவலைக்குரிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். இருப்பினும், இதுவரை ஒரு அடிப்படை பாதுகாப்பு தணிக்கை கூட நடத்தப்படவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவிட்ட பாதுகாப்பு ஆய்வு மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் கூட இன்னும் முழுமையடையாத நிலையில், தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இரு மாநிலங்களுக்கும் ஏற்புடைய நிலைப்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலித்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே கேரளாவின் நிலைப்பாடு. தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முயற்சித்தால், கேரளா சுப்ரீம் கோர்ட்டை நாடும். கேரளாவின் நலன்களை மாநில அரசு உறுதியாகப் பாதுகாக்கும்.
முல்லைப் பெரியாறில் புதிய அணையைக் கட்டுவதே எங்களின் அடிப்படைத் கோரிக்கையாக தொடர்ந்து வருகிறது. கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், தமிழ்நாட்டிற்குத் தேவையான நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பரஸ்பர உடன்பாட்டின் மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதுவே மாநிலத்தின் நிலையான நிலைப்பாடாகும்.
தமிழ்நாடு-கேரளா இடையிலான உறவில், கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ஏதேனும் முக்கிய முடிவு கூட எடுக்கப்படவில்லை. உறவுகள் இருந்திருக்கலாம், ஆனால் நடைமுறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.
