மிழ் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி (88) நேற்று பெங்களூருவில் காலமானார்.

இனிமை, நளினம், தெளிவான தமிழ் உச்சரிப்பு ஆகியவற்றால் தனக்கென தனி முத்திரை பதித்த அவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் உள்ளிட்ட மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் ஜமுனா ராணி.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜமுனா ராணி, சிறுவயதிலேயே திரையுலகில் அறிமுகமானார். தமிழில் ‘கல்யாணி’ திரைப்படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான அவர், டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்து பாடிய ‘குலுங்கிடும் பூவில் எல்லாம்’, ‘ஓ தேவதாஸ்’, ‘மாமா மாமா’, ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’, ‘அத்திக்காய் காய் காய்’, ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின்’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

‘மகாதேவி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காமுகர் நெஞ்சில் நீதியில்லை’ பாடலை அவரைப் பாடவைக்க கவியரசர் கண்ணதாசன் பிடிவாதமாக வலியுறுத்திய சம்பவம் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்று, ஜமுனா ராணியை முன்னணி பாடகியாக உயர்த்தியது.

1960-களின் இறுதிக்குப் பிறகு திரைப்படங்களில் அவரது குரல் அரிதாகவே ஒலித்தது. ஆனால், 1987-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் இணைந்து பாடியதன் மூலம் ஜமுனா ராணி மறக்க முடியாத ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப் பாடல் புதிய தலைமுறைக்கும் அவரது குரலை மீண்டும் அறிமுகப்படுத்தியது.

தமிழ் திரையிசையில் தேன்குரலால் தனித்த அடையாளம் பதித்த ஜமுனா ராணியின் மறைவு, இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது காலத்தால் அழியாத பாடல்கள் என்றும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version