தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவைப் போற்றும் வகையில், தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு ‘மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முடிவு உள்ளூர் மக்கள், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது பெற்றோருடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். இந்திய ராணுவத்தில் துணிவும் தியாக உணர்வும் மிகுந்த அதிகாரியாகப் பணியாற்றிய அவர், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அவரது அசாத்திய துணிச்சலுக்கு இந்திய அரசு நாட்டின் உயரிய வீரத் தியாக விருதான ‘அசோக சக்ரா’ வழங்கிப் பாராட்டியது. தன் சொந்த ஊரில் இருந்து வந்த இந்த வீரரின் நினைவை நிலைப்படுத்தும் வகையில் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தப் பெயர் மாற்ற நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. 2025 ஆகஸ்ட் 26-ம் தேதி நகராட்சி நிர்வாக இயக்குநர் சார்பில் தொடக்கக் கடிதம் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 19-ம் தேதி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் 2023 விதிகளின் பிரிவு 186-ஐப் பின்பற்றி அனுமதி கோரப்பட்டது. அக்டோபர் 23-ம் தேதி துறை முதன்மை செயலர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான முக்கியப் பிரதான சாலைக்கு இந்தப் பெயர் சூட்டப்படுவது, அப்பகுதி மக்களுக்கு பெரும் பெருமையைத் தருகிறது. மேஜர் முகுந்தின் பெற்றோர் வசிக்கும் இல்லத்திற்கு அருகிலேயே இந்தச் சாலை அமைந்திருப்பதால், குடும்பத்தினருக்கு இது உணர்ச்சிப்பூர்வமான தருணமாக அமைந்துள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள், ராணுவ முன்னாள் வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

“தேசத்திற்காக உயிர் நீத்த வீரர்களின் நினைவை நிலைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் முன்வருவது பாராட்டுக்குரியது” என்று பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தாம்பரம் மாநகராட்சியின் இந்த உணர்வுபூர்வமான நடவடிக்கை, மற்ற நகராட்சிகளுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் சாலையில் புதிய பெயர் பலகைகள் ஏற்றப்பட்டு, மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாக உணர்வு எதிர்கால தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் வகையில் நிலைநாட்டப்படும். இத்தகைய முடிவுகள், தேசபக்தியை ஊக்குவிப்பதோடு, இளைஞர்களுக்கு ராணுவ சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version