திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீமான் வீட்டிற்கு சென்றதும் உதயநிதிக்கு காவடி தூக்க ஆரம்பித்து விட்டதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சியையும் அதன் மூத்த தலைவர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளரும், விருதுநகர் மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூரை குறிவைத்து அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், சீமான் தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதால் விரக்தி அடைந்து இத்தகைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பார்த்த அளவில் உயரவில்லை என்றும், காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் கூட டெபாசிட் இழந்தது அரசியல் ரீதியாக அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதனால் ஏற்பட்ட மனக்கசப்பே தற்போதைய விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் தனித்துவமான வாக்கு வங்கி இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், 2014 மக்களவைத் தேர்தலில் எந்த பெரிய கூட்டணியும் இல்லாத சூழலிலும் காங்கிரஸ் கணிசமான வாக்குகளை பெற்றிருந்ததாக நினைவூட்டினார். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தபோது, அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியின் மீதான நம்பிக்கையும், அவரது தலைமையை ஏற்றுக்கொண்ட மக்களின் ஆதரவும் கூட்டணிக்கு பலம் சேர்த்ததாக தெரிவித்தார்.

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிகளில் காங்கிரஸுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கூறிய மாணிக்கம் தாகூர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தாம் பதவி வகித்து வருவதாகவும், தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்தவரால் தங்களின் அரசியல் செல்வாக்கை கேள்வி கேட்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சீமான் முன்வைத்த கருத்துகளையும் அவர் மறுத்தார். தம்முடைய வெற்றி தி.மு.க. வாக்குகளால் மட்டுமே கிடைத்தது என்றால், காங்கிரஸ் ஆதரவால் வெற்றி பெற்றதாக கூறப்படும் உதயநிதி முதலில் பதவி விலக வேண்டும்; அதன்பிறகு தாமும் பதவி விலக தயாராக இருப்பதாக சவால் விடுத்தார்.

தமிழக அரசின் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவித்த மாணிக்கம் தாகூர், தற்போதைய ஆட்சியில் பல துறைகளில் ஊழல் குறைந்துள்ளதாக கூறினார். நெடுஞ்சாலை, பத்திரப்பதிவு, நகரமைப்பு உள்ளிட்ட துறைகளில் முன்பு பேசப்பட்ட முறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்பு வெளிப்படையாக பேசியவர்தான் சீமான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு, அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே தி.மு.க.வுக்கு ஆதரவான கருத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை நினைவூட்டிய அவர், 140 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட கட்சி பல அரசியல் ஏற்றத் தாழ்வுகளையும், விமர்சனங்களையும் கடந்து வந்துள்ளது என்றார். தற்போதைய அரசியல் சூழலில் காங்கிரஸ் தனது சுயபலத்தையும் சுயமரியாதையையும் தக்க வைத்திருப்பதாகவும், மாறாக மக்கள் ஆதரவிலிருந்து விலகிச் செல்லும் நிலை நாம் தமிழர் கட்சிக்கே ஏற்பட்டுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version