தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை தெரிவிப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த மேகதாது அணைத் திட்டத்துக்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. காவிரி நதிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் பேரவையில் பேசுகையில், “காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்றும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்றும் வழங்கிய இறுதித் தீர்ப்புகளை மதிக்காமல், படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமல், மத்திய அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று வலியுறுத்தினார். இதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

காவிரி ஒரு பற்றாக்குறைப் படுகை என நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், மொத்த நீரும் ஏற்கெனவே படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டது. எனவே, புதிய திட்டங்கள் அல்லது கூடுதல் நீர் பயன்பாட்டுக்கு இடமில்லை என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில மக்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், எந்தவித புதிய நீர்த்தேக்கத் திட்டத்தையும் பிற மாநிலங்களின் சம்மதமின்றி கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.

மேலும், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்த அனுமதியையும் மேகதாது திட்டத்துக்கு வழங்கக்கூடாது என மத்திய அரசை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தியது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ அல்லது அனுமதி அளிக்கவோ வேண்டாம் என மத்திய நீர்வள குழுமத்தையும் பேரவை கேட்டுக்கொண்டது.தமிழக விவசாயிகளின் நீர் உரிமையைப் பாதுகாக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பேரவை ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் தீர்மானத்தை வரவேற்று பேசினர். இறுதியில், மேகதாது அணைக்கு எதிரான இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் தேவை மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. காவிரி நீர் பங்கீடு விவகாரம் நீண்டகாலமாக இரு மாநிலங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாடு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version