கோவை அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

கோவை சட்டக்கல்லூரியில் இன்று மூன்றாவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த பெருமைக்குரிய அவர், இவ்விழாவில் பங்கேற்றது மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. சுமார் 650 மாணவர்கள் இந்த விழாவில் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

முதலமைச்சரின் கரூர் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் திமுக மற்றும் அதிமுகவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் கரூர் செல்வதைக் கண்டு எதிர்க்கட்சிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியாவது முதலமைச்சரின் கரூர் பயணத்தைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிபிஐ விசாரணை குறித்துப் பேசும் இவர்கள், தங்களது ஆட்சிக்காலத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை கோரியவர்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. தற்போது எப்.ஐ.ஆர் (FIR) கூட முழுமையாகப் படிக்காமல், உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளனர்.

திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் தமிழகத்தில் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில், வெறும் 10 முதல் 15 பேரைத் தவிர இந்த இரு கட்சிகளிலும் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும். அந்த அளவுக்குத் தமிழக மக்கள் அவர்களைப் புறக்கணித்து, எங்களை ஆதரித்து வருகிறார்கள்.

ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மக்களின் விருப்பத்தை ஏற்றே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

எங்களது கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைத்தையும் கலந்து பேசி இணக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். முதலமைச்சர் தலைமையில் விரைவில் அடுத்தகட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கூட்டணிக்கான பெயர் மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம்  ஆகியவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்களுக்கான வசதிகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, சுமார் 650 மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து 2000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அனைவருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கல்லூரியின் கொள்ளளவிற்கு ஏற்பச் செய்யப்பட்டிருந்தன. மதியம் 2 மணிக்கு முடிய வேண்டிய விழா, அரை மணி நேரத்திற்கு முன்பாகவே துரிதமாக நடத்தி முடிக்கப்பட்டது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version