திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வுக்காக வந்த அறநிலையத்துறை அமைச்சரிடம் அர்ச்சகர்கள் இவர் அமைச்சர் என தெரியாமலேயே பணம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. இளைஞர்கள் அதிகம் இடம்பெற்ற இந்த அமைச்சரவை, பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவியேற்ற காலம் முதலே அமைச்சர்கள் தங்கள் துறைகளில் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த ரமேஷ், கோயில்களில் பக்தர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறார். முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு போலவே, அவர் தொடர்ந்து கோயில் பகுதிகளுக்கு நேரடி விஜயம் செய்து, பராமரிப்பு பணிகள், பக்தர்கள் சந்திக்கும் சிரமங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அமைச்சர் ரமேஷ் ஆய்வுப் பணிக்காக வந்தார். கோயில் வளாகத்திற்குள் தனியாக நுழைந்த அவர், சுற்றிப் பார்த்தபோது, அங்கிருந்த அர்ச்சகர்களிடம், “சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் எவ்வளவு?” என்று கேட்டார். அதற்கு அர்ச்சகர்கள், ஒருவருக்கு ரூ.1,000 என்று தெரிவித்தனர். அமைச்சருடன் வந்த நான்கு பேருக்கும் சேர்த்து தலா ரூ.1,000 என மொத்தம் ரூ.4,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அர்ச்சகர்கள் கூறினர். அமைச்சர் ரமேஷ் உடனடியாக GPay மூலம் ரூ.4,000-ஐ அனுப்பினார்.

அர்ச்சகர்கள் அவரை அமைச்சர் என்று அடையாளம் கண்டுகொள்ளாமல் இந்தக் கட்டணத்தை வசூலித்துள்ளனர். பின்னர், கோயிலின் அன்னதான கூடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அதிகாரிகளிடம் இந்தச் சம்பவத்தை அமைச்சர் ரமேஷ் எடுத்துக் காட்டினார். “தரிசனத்துக்கு ரூ.1,000 வசூலிப்பது சரியா?” என்று கேள்வி எழுப்பி, கடுமையாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. கோயில்களில் பக்தர்களிடம் அநியாயமாகப் பணம் வசூலிப்பதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரம் அறிந்த பின் அவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்களிடையே பதற்றம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய அரசு, அறநிலையத்துறை கோயில்களில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version