அம்மா உணவகத்தில் நவதானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை உண்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் வன்னிஅரசு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள உழவர் சந்தையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இன்று காலை விரிவான ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கிய இந்த ஆய்வின்போது, அங்கு வர்த்தகம் செய்யும் உழவர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். சந்தைப் பகுதியில் உள்ள பொதுப் பயன்பாட்டு கழிவறையை அமைச்சர் நேரில் பார்வையிட்டபோது, அது மிகவும் அசுத்தமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிருப்தி தெரிவித்தார். உடனடியாக அதை சுத்தப்படுத்தி, அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிவறையாக மாற்றுமாறு அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், உழவர் சந்தையில் புதிய கடை வசதிகளை உருவாக்கி, விவசாயிகளுக்கு மேலும் சிறந்த வர்த்தக சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆய்வின் தொடர்ச்சியாக அமைச்சர் அருகிலுள்ள அம்மா உணவகத்திற்குச் சென்று, அங்கு நவதானியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை ருசி பார்த்தார். அப்போது சாம்பாரில் காய்கறிகள் இல்லாததைக் கவனித்த அமைச்சர், பணியாளர்களிடம் காரணம் கேட்டறிந்தார். அதற்கு பணியாளர்கள், “கடந்த ஆட்சியில் காய்கறிகள் சரியாக வழங்கப்படவில்லை. ஜெயலலிதா ஆட்சியில்தான் காய்கறிகள் போதுமான அளவு வழங்கப்பட்டன” என்று தெரிவித்தனர். அமைச்சர் இதனை குறிப்பு செய்துகொண்டார்.
இதனிடையே, அம்மா உணவகத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி பொதுமக்கள் அமைச்சரிடம் முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் அந்தப் பகுதியையும் நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்தபடியே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பொதுமக்களின் கோரிக்கை குறித்து விரிவாகத் தெரிவித்தார். திண்டிவனம் உழவர் சந்தை ஆய்வுக்குப் பிறகு, அமைச்சர் வன்னி அரசு திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் மேலும் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நாளை திண்டிவனம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவற்றை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளார். இந்த ஆய்வுப் பயணம் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு சேவை மையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணவும் அமைச்சர் வன்னி அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
