எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுவதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி கடந்த 4-ம் தேதி மக்களவையில் உரையாற்ற இருந்தார். அதற்கு முன்பாக அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டு, பிரதமர் மோடி பதிலுரை இன்றி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மோடி அவைக்கு வர பயந்துவிட்டார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் உரையின் போது காங்கிரஸ் கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக எனக்கு கிடைத்த தகவலின் பேரில் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என கூறியது நான் தான் என கூறினார்.
சபாநாயகரின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று ( 05.02.2026 ) பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். பிரதமர் பேச ஆரம்பிக்கும் போதே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் பிரதமர் மோடி தனது பேச்சை தொடர்ந்தார்.
” உலக நாடுகளின் பிரச்னைகளை தீர்க்க இந்தியா வலிமைமிக்க நாடாக மாறி வருகிறது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும். வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் கடந்த ஆண்டுகள் மைல் கற்களாக அமைந்துள்ளன. வளர்ந்த நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் 2014-ல் 11ம் இடத்தில் இருந்தோம். இன்று 3-வது இடத்தில் உள்ளோம். எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. எனது ஆட்சியில் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன. சிறு விவசாயிகள் பற்றி முந்தைய அரசு கவலைப்பட்டது இல்லை. நமது இளைஞர்களின் உரிமைகளை பழங்குடியினர் பறித்துக் கொள்கிறார்கள்” எனக் கூறினார்.
