உத்திரபிரதேச மாநிலம் ஜீவார் நகரில் ரூ.11,200கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,
“உலகளாவிய விமான நிலைய மையம் என்ற இந்தியாவின் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்று தெரிவித்துள்ளது. நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கையாக இது இருப்பதுடன், மண்டல மற்றும் சர்வதேச இணைப்பை அதிகரிக்கும் வகையிலும் அது இருக்கும். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்து, நொய்டா சர்வதேச விமான நிலையம் 2-வது பெரிய சர்வதேச விமான நிலையம் என்ற அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதனால், டெல்லி நகரானது உலகளாவிய விமான நிலைய மையங்களில் முன்னணி பெற்ற நகராக இருக்கும். இந்த இரு விமான நிலையங்களும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, ஒட்டுமொத்தத்தில் நெருக்கடி குறைவதுடன், பயணிகளை கையாளும் திறனும் விரிவடையும். இந்தியாவின் பெரிய பசுமைவெளி விமான நிலையங்களில் ஒன்றான இது, ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளை தொடக்கத்தில் கையாள்வதுடன் முழு அளவில் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த எண்ணிக்கை 7 கோடியாக அதிரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
