பிரான்சில் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஜூன் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேச உள்ளனர். பிப்ரவரி 2025-க்குப் பிறகு நடக்கும் இந்த முக்கியச் சந்திப்பில், வர்த்தகம், எச்-1பி (H-1B) விசா கொள்கைகள், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மாநாட்டிலேயே ஒப்பந்தம் இறுதி செய்யப்படாது என்றும், அடுத்தகட்ட தொழில்நுட்ப விவாதங்கள் தொடர வேண்டியுள்ளதால், இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதற்கான அடித்தளமாகவே இந்தச் சந்திப்பு அமையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான தனது பயணத்தைத் தொடங்கியுள்ள பிரதமர் மோடி, ஜி7 மாநாட்டின் வாயிலாக இந்தியா தனது சொந்தக் கருத்துகளை முன்னிலைப்படுத்துவதுடன், ‘குளோபல் சவுத்’ எனப்படும் வளரும் நாடுகளின் தேவைகளுக்காகவும் குரல் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து எட்டாவது முறையாக ஜி7 உச்சிமாநாட்டிற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது, உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
மேலும், இந்த உச்சிமாநாட்டின் போது ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழல் மற்றும் ஈரான் தொடர்பான விவகாரங்கள் குறித்து அதிபர் டிரம்ப் உலகத் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இந்தச் சந்திப்புகளின் ஒரு பகுதியாக, எகிப்து, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தலைவர்களையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
