நீட் மறுதேர்வு எழுதும் மராட்டிய மாணவர் அப்துல்லா என்பவருக்கு ஹால் டிக்கெட்டில் அபுதாபியில் தேர்வு மையம் என இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை (ஜூன் 21) நடைபெறவுள்ள நீட் யுஜி 2026 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், இந்தியாவில் உள்ள தேர்வு மையத்திற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள ஒரு இந்தியப் பள்ளியை தேசிய தேர்வு முகமை (NTA) ஒதுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த அப்துல்லா முகமது தலிப் என்ற மாணவருக்கு இந்த அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்துல்லாவின் குடும்பத்தினர் கூறுகையில், “நாக்பூரில் இருந்து விண்ணப்பித்த மகனுக்கு வெளிநாட்டு தேர்வு மையம் எப்படி ஒதுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அப்துல்லாவிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்பது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது. வெளிநாட்டுக்கு பயணிக்க முடியாத நிலையில், தேர்வு எழுதுவது எப்படி என்ற கேள்வி எழுந்தது. ஹால் டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பரவலான விவாதத்துக்கு உள்ளானது.
இந்த சம்பவத்தை உடனடியாக NTAவின் கவனத்துக்கு கொண்டு சென்ற அப்துல்லாவின் தந்தை, அதிகாரிகளிடம் இருந்து தொழில்நுட்பக் கோளாறு என்ற பதிலைப் பெற்றார். “தவறு சரிசெய்யப்பட்டு, புதிய ஹால் டிக்கெட் வழங்கப்படும்” என்று NTA உறுதியளித்துள்ளது. இதுதொடர்பாக மின்னஞ்சலும் அனுப்பப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
NTAவின் தொடர் கோளாறுகள்: இந்த சம்பவம், நீட் தேர்வு நடத்துவதில் NTAவின் அலட்சியப் போக்கை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மற்றொரு மாணவருக்கு மாலை 4 மணிக்கு தேர்வு என்று தவறான நேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாணவர்களுக்கு “கவலைப்படத் தேவையில்லை” என்று அறிவிப்புகளை அனுப்பி வருவதாக NTA தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நீட் யுஜி தேர்வில் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு, நாளை பேனா-காகித முறையில் மறுதேர்வு நடைபெற உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), ஓசிஐ பிரிவினர் உள்ளிட்டோருக்காக அபுதாபி, துபாய், தோஹா, குவைத், மஸ்கட், ரியாத், சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இருந்து விண்ணப்பித்த மாணவருக்கு வெளிநாட்டு மையம் ஒதுக்கப்பட்டது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
NTA அதிகாரிகள், அனுமதி அட்டையில் தனிப்பட்ட விவரங்கள், தேர்வு மையம் அல்லது நேரம் போன்றவற்றில் பிழை இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த முக்கிய தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இத்தகைய தொழில்நுட்பப் பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. NTA தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தேர்வு நடத்துவதில் உள்ள ஒழுங்கீனங்கள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகின்றன.
