தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு துரோகச் செயல்கள் நாட்டுக்கும் உலகுக்கும் தெரிந்தவை என்றும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகள் எழுவது வழக்கமாகிவிட்டது என்றும் அவர் சாடினார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் எந்த உரிமையை பறித்தது என்பதற்கு பதில் சொல்ல முடியாத காங்கிரஸ், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து திசை திருப்ப முயற்சிக்கிறது” என்று குறிப்பிட்டார். நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பல ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ், கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தைத் தொட முடியாமல் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதாகவும், இத்தகைய கட்சிக்கு மற்றவர்களை விமர்சிக்க தகுதியில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
திமுகவுடன் பழைய கூட்டணி மனநிலையில் இருந்து, “₹1 வரிக்கு 29 பைசா” என்ற பழைய பொய் பிரச்சாரத்தையே தொடர்வது, காங்கிரஸ் இன்னும் ‘கோமா’ நிலையில் இருந்து மீளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். மேலும், தற்போதைய தமிழக அரசின் கூட்டணிக் கட்சியான தவெக தலைமையில் செயல்படுத்தப்படும் “VB G RAM G” திட்டத்தின்கீழ் வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை ₹300க்கு மேலாகவும் உயர்த்தியுள்ள நிலையில், கள நிலவரம் அறியாமல் காங்கிரஸ் அதை எதிர்ப்பது வருத்தமளிப்பதாக நாகேந்திரன் கூறினார்.
“Wake Up Sir!” என்று எச்சரித்த அவர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய நேரத்தில் துரோக வழிகளைப் பற்றி சிந்திப்பது சரியல்ல என்றார். கச்சத்தீவை இந்திரா காந்தி காலத்தில் தாரை வார்த்துக் கொடுத்து தமிழக மீனவர்களை வஞ்சித்தது, அவசர நிலைப் பிரகடனத்தின் மூலம் மாநிலங்களின் ஜனநாயகத்தை நசுக்கியது, அரசியல் சாசனப் பிரிவு 356ஐ 90 முறை பயன்படுத்தி மாநில அரசுகளை கவிழ்த்தது உள்ளிட்ட காங்கிரஸின் செயல்கள் தமிழக மக்களுக்கு நினைவில் உள்ளன.
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பிற மாநிலங்களுக்கு சாதகமாக நடந்துகொண்டது, தற்போது மேகதாது அணை மூலம் தமிழக விவசாயிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பதும் காங்கிரஸின் செயல்களே என நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.
“கூட்டாட்சித் தத்துவத்தை பலமுறை தீயிட்டுக் கொளுத்திய காங்கிரஸ், இப்போது மட்டும் மாநில உரிமைகளைப் பற்றி பேசுவது நியாயமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மக்களுக்கு நல்லது செய்யாமல் துரோக வழிகளைப் பற்றியே சிந்திப்பது “சாத்தான் வேதம் ஓதுவது” போன்றது என்று கடுமையாக விமர்சித்தார். இந்த அறிக்கை தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ்-பாஜக இடையேயான விவாதம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
