வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் தீவிர மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயிலான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த மோதல், சில காலம் அமைதியான பின்னர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூர்மையாக உயர்ந்தது. கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதால் சில நாட்கள் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 24ஆம் தேதி ஓமன் மற்றும் ஐ.நா. சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) இணைந்து, ஹார்முஸில் சிக்கிய வர்த்தகக் கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஓமன் கடற்கரை வழியாக தற்காலிக மாற்று வழித்தடத்தை அறிவித்தன.

அமெரிக்கா இந்தப் பாதையின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தது. எனினும், ஈரான் இந்த மாற்று வழித்தடத்தை கடுமையாக எதிர்த்துள்ளது. தான் அங்கீகரித்த வழித்தடத்தை மட்டுமே கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், ஓமன் வழியைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஈரான் எச்சரித்து வருகிறது. ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்த எச்சரிக்கையை மீற முயலும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும்.

இந்தச் சூழலில் இன்று காலை ஒரு இந்திய எண்ணெய் டேங்கர் கப்பல் ஓமன் வழித்தடத்தைப் பயன்படுத்த முயன்றபோது ஈரான் ராணுவம் தலையிட்டு அதைத் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குள் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஈரான் கடந்த சில நாட்களில் குறைந்தது மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் தரப்பில் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பதற்றம் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாலுமிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவின் ஆயிரக்கணக்கான மாலுமிகள் வளைகுடா பிராந்தியத்தில் பணியாற்றி வருகின்றனர். முந்தைய மோதல் காலத்தில் பல இந்திய மாலுமிகள் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலைமை தொடர்ந்தால் இந்தியக் கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் இறக்குமதியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் மேல் கடந்து செல்லும் முக்கிய பாதை என்பதால், இங்கு ஏற்படும் எந்த இடையூறும் உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version