சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையின் சுகாதார வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் தூய்மை பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மருத்துவமனை முழுவதும் எப்போதும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சமீபத்தில் எழுந்த புகார்களைப் போன்ற குற்றச்சாட்டுகள் இனி வராத வகையில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், சுமார் ஐந்து நிமிடங்கள் அவர்களுடன் உரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளையும், அவர்களுடன் இருந்த தாய்மார்களையும் சந்தித்த முதலமைச்சர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சை, அவசர சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கான சேவைகள் குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளை நேரில் பார்த்த முதலமைச்சர், சில குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சி நலம் விசாரித்ததுடன், பெற்றோரிடமும் மருத்துவ சேவைகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதோடு, சுத்தம், பாதுகாப்பு மற்றும் மனிதநேய சேவைகளிலும் எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதலமைச்சரின் இந்த ஆய்வு மருத்துவமனை நிர்வாகத்தினரிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version