சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, தங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த ஆறு நாட்களில் தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும் என்றும், முந்தைய அரசின் பழைய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட படிப்படியாக முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றின் புழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைப்பது குறித்து முதலமைச்சரே இறுதி முடிவு எடுப்பார் என்றார்.

நீட் தேர்வு  வியாபாரமாகிவிட்டது

கல்வித்துறை குறித்துப் பேசுகையில், நீட் தேர்வை மத்திய அரசால் கூட சரியாக நடத்த முடியவில்லை என்றும், இதனால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் சாடிய அவர், நீட் தேர்வு என்பது தற்போது ஒரு மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டதாகவும், எனவே நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தங்களின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் தெரிவித்தார். நீட் தேர்வால் எந்தவொரு பயனும் இல்லை, அது முற்றிலும் தேவையற்ற ஒன்று என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு நடத்தப்படும் ஒரு தேர்வையாவது மத்திய அரசு முறையாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமியும் மு.க.ஸ்டாலினும் சில தொழிலதிபர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க நூறு சதவீதம் முயற்சித்ததாகவும், இது தொடர்பாகத் தங்களது ஆதரவாளர்களுடன் அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தியதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ஆனால், மக்களுக்கு எதிராகச் செல்ல வேண்டாம் என சில முக்கிய தலைவர்கள் கூறியதால் அந்த முயற்சி மாறியுள்ளது என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version