நீட் தேர்வு நேர்மையாக, வெளிப்படையாக நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான நீட் யுஜி, மே 3 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்த சர்ச்சை எழுந்ததால், தேசிய தேர்வு முகமை (NTA) மே 12 அன்று தேர்வை ரத்து செய்தது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மறுதேர்வின்போது முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், ஜூன் 22 வரை டெலிகிராம் செயலியை இந்தியா முழுவதும் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நீட் தேர்வை நியாயமான முறையிலும், முழு வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான விரிவான மற்றும் நீண்டகால வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என வெங்கடேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு (PIL) ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது நீதிபதிகள், 2024-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினர். மேலும், தற்போதைய வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தனி வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் இதே விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, உயர்நீதிமன்றம் தலையிட்டு விசாரணை செய்ய முடியாது எனக் கருதிய நீதிபதிகள், வெங்கடேஸ்வரன் தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீட் தேர்வில் தொடர்ந்து எழும் முறைகேடு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவ இடங்களுக்காக போட்டியிடும் இந்தத் தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள் அவசியம் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வரும் தீர்ப்பு இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
