முதல்வர் விஜயின் இன்றைய உரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக, அவர் தனது ஆட்சியின் குறைபாடுகளுக்கு பொறுப்பேற்காமல் முந்தைய அரசுகளின் மீது பழிசுமத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுயநல தற்பெருமை பேச்சு. இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இதுதான். தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் – ஒழுங்கை சீர்செய்ய காவல் துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா? என்ன புது உருட்டாக இருக்கிறது இதெல்லாம்?
இவர் மீது பழிபோடுகிறார்களாம். தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு தெரிந்ததா? இது சுயநல தற்பெருமை இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சிதான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போதுதான் கண்டுபிடித்தீர்களா? இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம். அப்புறம்?
கத்தி பேசினால், கத்தி பட டயலாக் மாடுலேசனில் பேசினால், பொய் எல்லாம் உண்மை ஆகி விடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்துக்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1.
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனால் ஒன்று. இரண்டே பேருக்கு நடுவில் தான் போட்டியே. எதில் என்றால், மக்களை ஏமாற்றுவதில் தான், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதில் தவெக – திமுகவையே மிஞ்சிதான் இருப்பீர்கள் போல. எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
(பி.கு: நீங்க கோட்டு போடுங்கள். போயஸ் கார்டனில் வீடு கூட வாங்குங்கள். யார் கவலைப்பட்டது? உலகமே உங்களை சுற்றி தான் இயங்குவது மாதிரி சும்மா நசநச என்று புலம்பிக்கொண்டு இருக்காதீர்கள் முதல்வர் விஜய்)” எனத் தெரிவித்துள்ளது.


