ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைக்க வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுவதாக காகரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார். மேலும், போராட்டக்காரர்களின் பெயரைக் கெடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி தொழிலாளர்கள் கல்வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எந்தவிதப் பிரச்சினையும் இன்றி கடந்த ஒரு மாதமாக இந்தப் போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது. ஆனால், போராட்டம் தீவிரம் அடைந்தவுடன், நிலைமையை மாற்ற பாஜக தரப்பிலிருந்து வெளியில் இருந்து குண்டர்கள் அனுப்பப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைக்கவே வெளியாட்கள் அனுப்பப்படுகின்றனர். பாஜகவினர்தான் இங்கு வந்து கற்களை வீசுகிறார்கள். காவல்துறையினர் லாரிகளில் கற்களைக் கொண்டு வந்து இறக்குகிறார்கள். பாஜக குண்டர்கள் வந்து கற்களை வீசிவிட்டு, CJP மீது பழிசுமத்துகிறார்கள்” என்றார்.

போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி மிகவும் கொடூரமானது எனக் குறிப்பிட்ட அபிஜித் திப்கே, இதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று எச்சரித்தார். அதேசமயம், சோனம் வாங்சுக் தனது உண்ணா விரதத்தைக் கைவிட வேண்டும் என்றும் தாங்கள் கோரி வருவதாகக் கூறினார். இப்போராட்டம் 34-வது நாளையும், சோனம் வாங்சுக்கின் உண்ணா விரதம் 26-வது நாளையும் எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, CJP-யின் மற்றொரு முக்கிய நிர்வாகியான சௌரவ் தாஸ் பேசுகையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்றும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். மேலும், போராட்டம் எப்போதுமே அமைதியான முறையில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என சோனம் வாங்சுக்குடன் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version