பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும்நிலையில், அதனை வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் ரவுண்ட்ரோடு லிங்கா அவன்யூ பகுதியில் வசித்து வரும் பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரண்டு வாகனங்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டில் இருந்த ஜஸ்டின் மணிகண்டனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்தச் சோதனையின் போது, நில மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இக்கோயில் நில மோசடி வழக்கில் பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
