த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு முறையாக இணையதளம் மூலம் பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபன் தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரித்து, வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை 16 தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் நேற்று தொடங்கி வைத்தார்….
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றால் அதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். சுவிதா இணையதளத்தில் 48 மணி நேரத்துக்கு முன்னரே பதிவு செய்து அனுமதி பெறுவது கட்டாயம். த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு முறையாக இணையதளம் மூலம் பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும்”.
”மேடை அமைத்து பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டால் பொது பணித்துறையிடம் அனுமதி வாங்கவேண்டும். அரசியல் கட்சி தேர்வு செய்யும் இடம் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லை என போலீசார் என்.ஓ.சி. கொடுக்க வேண்டும். ஆர்.ஓ.விடம் இணையதளம் மூலம் ஒரு அனுமதி கடிதம் வருகிறது என்றால் அவர் அதனை பரிசீலித்து முறையாக சான்றிதழ்கள் இருந்தால் 3 முதல் 4 மணி நேரத்துக்குள் அனுமதி கொடுத்து விடுவார்.
நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பு பேரணி செல்கிறோம் என நேரில் சென்று கடிதம் கொடுத்தால் அனுமதி கொடுக்க முடியாது. இணையதளம் மூலம் அனுமதி கேட்டு பதிவு செய்பவர்களின் மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை இணையதளத்திலேயே பதிவு செய்கிறோம். சென்னையில் 19 ஆயிரத்து 500 வாக்குசாவடி அலுவலர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது” எனக் கூறினார்.
