ஜூலை 29 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச புலிகள் உச்சி மாநாட்டில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. அப்போது 13 புலிகள் வாழும் நாடுகள் ஒன்றிணைந்து, 2022 ஆம் ஆண்டுக்குள் உலகப் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை நிர்ணயித்தன.
இந்த இலக்கை இந்தியா காலக்கெடுவிற்கு முன்பே சாதித்துக் காட்டியது. 2006 ஆம் ஆண்டு வெறும் 1,411 ஆக இருந்த இந்தியாவின் காட்டுப் புலிகளின் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டின் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின்படி 3,682 ஆக உயர்ந்துள்ளது. உலகில் உள்ள காட்டுப் புலிகளில் ஏறக்குறைய 70 சதவீதம் இந்தியாவில்தான் வாழ்கின்றன. இது உலகளாவிய பாதுகாப்பு முயற்சிகளில் இந்தியாவை முன்னணியில் நிறுத்தியுள்ளது. தற்போது நாட்டில் 58 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவை சுமார் 84,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியவை.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது எக்ஸ் தளப் பதிவில், “உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள். உலகப் புலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பதில் இந்திய மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இயற்கையோடு இயைந்து வாழும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று, நமது மக்களின் கூட்டு மனவுறுதியால் இந்தியாவின் புலிப் பாதுகாப்பு முயற்சிகள் உந்தப்படுகின்றன. அறிவியல் அடிப்படையிலான பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றிற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் அர்ப்பணிப்பு இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும், உள்ளூர் மக்களுக்கு வலுவூட்டுவதிலும் இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஜிம் கார்பெட் (உத்தரகாண்ட்), கான்ஹா (மத்தியப் பிரதேசம்), ரந்தம்பூர் (ராஜஸ்தான்), சுந்தரவனம் (மேற்கு வங்கம்), பந்திப்பூர் (கர்நாடகா) ஆகியவை இந்தியாவின் முக்கிய புலிகள் காப்பகங்களில் சில. ப்ராஜெக்ட் டைகர் திட்டத்தின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அறிவியல் கண்காணிப்பு, வாழிட மறுசீரமைப்பு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவை இந்தியாவை உலகப் புலிப் பாதுகாப்பின் முன்னோடியாக மாற்றியுள்ளன.
