தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், இன்னும் ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்பு கிடைக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 எம்.எல். ஏ-க்கள் தேவை. தவெக 108 இடங்களை வென்றுள்ளதால், ஆட்சியை அமைக்க குறைந்தது 10 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது. 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள் மற்றும் சில சிறு கட்சிகள், “மீண்டும் தேர்தல் வரக்கூடாது” என்ற அடிப்படையில் தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதரவு கடிதம் நாளை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் முட்டுக்கட்டை
இந்த நிலையில், நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய். இருப்பினும், ஆளுநர் தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில். ஆளுநர் அர்லேகர், இன்று தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்திருந்தார். சந்திப்பின் போது ஆட்சியமைக்க தேவையான அளவு பெரும்பான்மையை காட்டினால், ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இருப்பதை தவெக தலைவர் விஜய் நிரூபிக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உரிமைக்குரல் எழுப்பாத விஜய்
இந்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் தரப்பிலிருந்து ஆளுநருக்கு எதிரான நேரடி அரசியல் அழுத்தம் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. விசிக, இடதுசாரி கட்சிகள், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் கூட ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
ஆனால் யார் பேச வேண்டுமோ , யார் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டுமோ அங்கிருந்து குரல் வரவில்லை. அதாவது தவெக தலைவர் விஜய்யிடமிருந்தோ அல்லது அவரது கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தரப்பிலிருந்தோ கூட எதிர்ப்புக்குரல் எழவில்லை.
ஆளுநருக்கு எதிர்ப்பு
ஆனால், ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பி உள்ளதோடு, அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளது. தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்னும் நோக்கத்துடன் செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
விஜய்க்கு கேள்வி
இந்த நிலையில், விஜய் வாய் திறக்காமல் இருப்பதைக் கண்டித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக” என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், “இதுவே 108 இடங்கள் திமுகவுக்கு கிடைத்திருந்தால், ஆளுநர் இப்படி தாமதித்திருக்க முடியுமா? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது ஆர்.என்.ரவிக்கு நடந்ததுபோல் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தரப்பு சொல்வது என்ன?
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் திமுக அரசுக்கு இடையிலான மோதல் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ரீதியாக முக்கிய விவாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக, சட்டமன்ற உரை விவகாரம், மசோதாக்கள் ஒப்புதல் தாமதம், மாநில உரிமைகள் போன்ற விஷயங்களில் திமுக தொடர்ந்து ஆளுநரை எதிர்த்து வந்தது. அந்த அரசியல் அனுபவத்துடன் ஒப்பிடும்போது, தவெக தற்போது மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், மு க ஸ்டாலின் ஏற்கனவே “அடுத்த அரசு அமைவதில் திமுக குறுக்கே நிற்காது” எனத் தெளிவுபடுத்தியிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் தவெக ஆதரவாளர்கள், திமுக மீதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். “தவெக ஆட்சியமைப்பதை திமுகதான் மறைமுகமாக தடுக்கிறது” என்ற வகையில் பல பதிவுகள் வைரலாகி வருகின்றன. ஆனால் இதற்கு திமுக தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்படுகிறது.
அதேநேரத்தில், விஜய் தரப்பினர் இதை வேறுவிதமாக விளக்குகின்றனர். “ஆட்சியமைப்பு விவகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டும். தேவையற்ற மோதல் அரசியலில் ஈடுபடாமல், அமைதியாக பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில்தான் தவெக உள்ளது” என்பதே அவர்களது நிலைப்பாடாக கூறப்படுகிறது.
மேலும், புதிய கட்சியாக இருப்பதால், ஆரம்பத்திலேயே மத்திய அரசுடன் நேரடி மோதலை உருவாக்க விரும்பவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இதனால் தான் விஜய் நேரடியாக ஆளுநர் அல்லது பாஜக குறித்து தாக்குதலான கருத்துகளைத் தவிர்த்து வருகிறார் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த சில நாட்கள் தமிழக அரசியலின் மிகவும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. ஆளுநர் எப்போது முடிவு எடுப்பார்? விஜய் எப்போது உரிமைக்குரல் எழுப்புவார்? எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகாரப்பூர்வமாக எப்போது வெளிப்படும்? என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தின் முக்கிய கேள்விகளாக உள்ளன.
– பா. முகிலன்
