தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு அமைவதில் ஒருபுறம் ஆளுநர் மாளிகையில் அரசியல் பரபரப்பு நீடித்து வரும் வேளையில், மறுபுறம் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 15-ஆம் தேதி முதல் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இனி அரசு நிர்வாகம் அதன் வழக்கமான வேகத்தில் இயங்கத் தொடங்கும் எனத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், தாசில்தார்கள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை அனைத்து அரசு அதிகாரிகளும் வழக்கமான மக்கள் நலப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, முழுமையாகத் தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வாக்காளர் விழிப்புணர்வு, வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் தேர்தல் பொருட்கள் விநியோகம் என இரவு பகலாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தற்போது நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், முடங்கிக் கிடந்த அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துதல், அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் புதிய நலத்திட்ட அறிவிப்புகள் போன்ற நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இனி எந்தத் தடையும் இருக்காது.

குறிப்பாக, தேர்தல் நேரத்தில் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்கனவே கலைக்கப்பட்ட நிலையில், ரொக்கப் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளும் இனி நடைமுறையில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் தவெக ஆட்சியமைப்பதில் ஆளுநரின் மௌனம் மற்றும் சி.வி. சண்முகத்தின் டெல்லி பயணம் போன்ற அரசியல் திருப்பங்கள் அரங்கேறினாலும், மறுபுறம் அரசு இயந்திரம் மீண்டும் சீராக இயங்கத் தொடங்கியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version