புதுச்சேரியில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மூன்று புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கான பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து, என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி கடந்த 13-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையை முழுமையாக்கும் நோக்கில் மேலும் மூன்று பேரின் பெயர்களை முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் கைலாஷ்நாதனிடம் பரிந்துரைத்தார். அதன்படி, என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜவேலு மற்றும் சிவக்கொழுந்து, பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

முதலமைச்சரின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஆளுநர் அலுவலகம் அந்த கோப்பை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டது. எனினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திரிபுரா மற்றும் குஜராத் மாநிலங்களில் அரசுமுறை பயணத்தில் இருந்த காரணத்தால், கோப்பு உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தேவையான நிர்வாக நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டு, அமைச்சர்கள் நியமனக் கோப்பு ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பரிசீலித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, மூவரின் நியமனத்திற்கும் நேற்று இரவு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்திற்கு இருந்த அனைத்து நிர்வாகத் தடைகளும் நீங்கியுள்ளன. புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு துறைகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version