தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நியாயவிலைப் பொருட்களை வழங்கும் சிறப்பு ஏற்பாடு வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) பாபு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது இல்லங்களுக்கே அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, ஜூன் மாதம் 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களில் சென்னை மாநகரின் 18 மண்டலங்களில் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரேம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் இந்த சிறப்பு விநியோகப் பணி தீவிரப்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உரிய பொருட்களை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஏற்பாடு மூலம் பயனாளிகளுக்கு பயணச் சிரமம் தவிர்க்கப்பட்டு, உரிய நேரத்தில் தரமான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாயுமானவர் திட்டம் என்பது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் அரசு கொண்டு வந்த முக்கிய திட்டமாகும். இதன் கீழ் வழங்கப்படும் பொருட்கள் அரசு நிர்ணயித்த நியாய விலையிலேயே வழங்கப்படும்.

சென்னை மண்டல கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இந்த இரு நாட்களிலும் விநியோகப் பணியை கண்காணித்து, எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் பணிகள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டைகளை தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விநியோகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடையவுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version