12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேர்வுத் தாள்களை ஆன்லைனில் மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படும் OSM (On-Screen Marking) அமைப்பில் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை சிபிஎஸ்இ (CBSE) வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது.
சிபிஎஸ்இ பயன்படுத்தி வந்த OSM இணையதளத்தில் தரவு பாதுகாப்பு தொடர்பான பலவீனங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, ‘அமேசான் கிளவுட் ஸ்டோரேஜ்’ தளத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக 19 வயதான ஹேக்கர் நிசர்கா அதிகாரி ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கிடையில், டெல்லியைச் சேர்ந்த வேதாந்தா என்ற மாணவர், தனது மதிப்பெண்களில் சந்தேகம் எழுந்ததால் விடைத்தாளின் நகலை பெற்றபோது, அதிலிருந்த கையெழுத்து தன்னுடையது அல்ல என்றும், அது தனது விடைத்தாளே அல்ல என்றும் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிபிஎஸ்இ நடத்திய உள்விசாரணையில் OSM அமைப்பில் சில குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, OSM அமைப்பின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் ஐஐடி சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அடங்கிய குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அமைப்பை முழுமையாக மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
=============
