கடன் தவணை தாமதமானதால் இரவு நேர அழைப்புகள், குடும்பத்தினருக்கு தொல்லை, அண்டை வீட்டாரிடம் அவமானம், மிரட்டல் போன்ற அனுபவங்கள் பல இந்தியக் கடனாளிகளுக்குப் பரிச்சயமானவை. ஆப் லோன், கிரெடிட் கார்டு உள்ளிட்ட கடன்களில் சரியான நேரத்தில் பணம் செலுத்தாத போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் கடுமையாக நடந்து கொள்வதாக ஏராளமான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தன.

இத்தகைய கொடுமைகளால் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தப் பின்னணியில், கடன் வசூலில் கடனாளியின் கண்ணியம், அந்தரங்கம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.

வங்கிகள், என்பிஎஃப்சிகள் உள்ளிட்ட அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இவை பொருந்தும். புதிய விதிகளின்படி, முகவர்கள் அல்லது வங்கி ஊழியர்கள் பயமுறுத்தல், மிரட்டல், ஆபாச மொழி பயன்படுத்துதல், சமூக ஊடகங்களில் கடனாளியின் தனிப்பட்ட விவரங்களைப் பதிவிடுதல், குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களைத் தொடர்புகொண்டு தொல்லை தருதல், பொதுவெளியில் அவமானப்படுத்துதல் அல்லது தவறான தகவல்களைக் கூறுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.

தொடர்பு கொள்ளும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே. கடனாளி கேட்டுக்கொண்டால் மட்டுமே இந்த நேரத்தைத் தாண்ட அனுமதி. குடும்ப இறப்பு, மருத்துவ அவசரம் அல்லது திருமணம் போன்ற சூழல்களில் தொடர்பு தவிர்க்கப்பட வேண்டும். நேரில் சந்திப்பு கடனாளி விரும்பும் இடத்திலேயே நடைபெற வேண்டும். தொடர்ந்து இரண்டு முறை வரத் தவறினால் மட்டுமே வீடு அல்லது அலுவலகத்திற்குச் செல்லலாம். அதற்கு குறைந்தபட்சம் ஒரு நாள் முன்பே அறிவிப்பு தர வேண்டும். முகவர் அடையாள அட்டை மற்றும் வங்கியின் அனுமதிக் கடிதத்தைக் கட்டாயம் காட்ட வேண்டும்.

வெளி முகவர்களிடம் ஒப்படைத்தாலும் அவர்களின் நடத்தைக்கு வங்கியே முழுப் பொறுப்பு. அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வன்முறையைத் தூண்டும் கடுமையான இலக்குகள் அல்லது ஊக்கத்தொகை திட்டங்கள் தடை. IIBF மூலம் பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்ற முகவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

விதி மீறலால் பாதிப்பு ஏற்பட்டால் கடனாளி நஷ்டஈடு பெற உரிமை உண்டு. கடன் ஒப்பந்தத்திலேயே புகார் அதிகாரியின் விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். இந்த நடவடிக்கை முறையற்ற வசூல் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கடனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version