திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில், இளைஞர்கள் சிலர் உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின்புறத்தில் உள்ள ஏணிகளில் இளைஞர்கள் நின்றபடி பயணம் செய்துள்ளனர். இந்த ஆபத்தான காட்சியைக் கண்ட சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த நேரத்தில் பேருந்து திடீரென பிரேக் போட்டாலோ அல்லது வேகத்தடை ஏதேனும் வந்தாலோ, அவர்கள் கீழே விழுந்து உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் செயலைத் தட்டிக்கேட்க வேண்டிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கண்டு கொள்ளாமல் இருந்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய அலட்சியமான பயணங்கள் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறை மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இத்தகைய ஆபத்தான பயணங்களைத் தடுத்து, பயணிகளை வாகனத்திற்குள் அமர வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், காவல்துறையினர் இதுபோன்ற விதிமீறல்களைக் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

