தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே சின்னகுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காளமூர்த்தி. இவரது மகள் நிதிஷா, தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், தடகள போட்டியில் வீராங்கணையாக விளங்கி வந்தார். நிதிஷா பட்டுக்கோட்டை அருகே உள்ள நம்பிவயல் கிராமத்தில் ஹரிஹரன் என்பவரது உறவினர் வீட்டிலிருந்தபடி கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கங்காளமூர்த்தியும் அவரது உறவினர்களும் நம்பிவயல் கிராமத்துக்கு சென்று நிதிஷா சின்னகுமுளையில் உள்ள வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி நிதிஷா பெற்றோருடன் செல்ல மறுத்துள்ளார். நேற்று நம்பியவயலில் இருந்த நிதிஷாவை உறவினர்கள் வலுகட்டாயமாக கடத்தி சென்று, திருச்சி தில்லைநகரில் உள்ள மன நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையிலிருந்தவாறு போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிதிஷா, தன்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக புகார் அளித்தார். உடனடியாக திருச்சியில் உள்ள சிங்கப்பெண் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று நிதிஷா மீட்டு, தஞ்சாவூரில் உள்ள சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நிதிஷாவை ஏன் கடத்தினார்கள்? எதற்காக மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நிதிஷாவை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
