தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான பூமணி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78.

தமிழ்நாட்டின் கரிசல் மண்ணின் யதார்த்த வாழ்க்கையையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தனது எழுத்துக்களின் மூலம் உலகிற்குக் காட்டியவர் பூமணி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம்.

இவர் எழுதிய ‘வெக்கை’, ‘பிறகு’, ‘அஞ்ஞாடி’ உள்ளிட்ட நாவல்கள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இதில் 1980-களில் வெளியான ‘வெக்கை’ நாவலைத் தழுவிதான், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகிப் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘அசுரன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது.

2014ம் ஆண்டு இவர் எழுதிய வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘அஞ்ஞாடி’ நாவலுக்குத் தமிழ் இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்திய அகாடமி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

எழுத்தோடு நின்றுவிடாமல், கருவேல மரங்களை மையமாகக் கொண்டு 1996-ல் ‘கருவேலம்பூக்கள்’ என்ற திரைப்படத்தையும் பூமணி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளையும் பூமணி எழுதி உள்ளார். இலக்கிய சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ் சங்க விருது, விஷ்ணுபுரம் விருது உள்ளிட்ட விருதுகள், பரிசுகளை பூமணி பெற்றுள்ளார்.  

சென்னையில் காலமான பூமணியின் உடல், பொதுமக்கள் மற்றும் இலக்கியவாதிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அவரின் இறுதிச் சடங்குகள் இன்று (ஜூலை 13) மாலை கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரிசல் இலக்கியத்தின் ஒரு முக்கியத் தூணாக விளங்கிய எழுத்தாளர் பூமணியின் மறைவு, தமிழ் எழுத்துலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version