கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் அவசரக் கால ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டதோடு, பொதுமக்களின் மொபைல் போன்களுக்கும் அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதால் வளைகுடா பிராந்தியத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்கப் படைகள் ஈரான் மீது நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஈரானில் உள்ள பல முக்கிய இலக்குகள் மீது அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு அண்மையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
ஈரானின் இந்த அதிரடிப் பதில் தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது பாதுகாப்பு நிலையை உடனடியாக உயர்த்தின.
நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகக் கத்தார் உள்நோட்டு அமைச்சகம் பொதுமக்களுக்கு மொபைல் போன்கள் மூலம் அவசர எச்சரிக்கை விடுத்தது. மக்கள் அனைவரும் வீடுகளிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ இருக்குமாறும், அதிகாரப்பூர்வ உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஹ்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் குவைத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘குனா’, இரு நாடுகளிலும் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததை உறுதிப்படுத்தியுள்ளன. பொதுமக்கள் யாரும் பீதியடையாமல், உடனடியாக தங்களுக்கு அருகில் உள்ள பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

