வளைகுடா பகுதியில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் உருவான எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இன்று (ஜூலை 1) முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.கடந்த மாதம் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் இறக்குமதி முடங்கியது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை அச்சத்தால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் பெட்ரோல்-டீசல் வாங்கிச் சேமித்ததால், சில பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் தட்டுப்பாடு உருவானது. இதைத் தடுக்கும் வகையில் ஜூன் 12-ம் தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தது.

அந்த உத்தரவின்படி, சில்லறை பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் டேங்கில் மட்டுமே எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என்றும், தொழில், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெரிய நுகர்வோர்கள் சில்லறை நிலையங்களில் இருந்து எரிபொருள் வாங்க தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வளைகுடா பகுதியில் போர் பதற்றம் குறைந்து, ஹார்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் போக்குவரத்து சீராகத் தொடங்கியுள்ளது. இதனால் நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் வினியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. சூழ்நிலையை மதிப்பீடு செய்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம், கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்தது.

நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “நிலவும் வினியோக நிலவரத்தை ஆய்வு செய்த பின்னர், ஜூன் 12-ம் தேதியிட்ட ஆணை இனி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ன் பெட்ரோலியப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த ஆணை திரும்பப் பெறப்படுவதாகவும், ஜூலை 1 முதல் இது அமலுக்கு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவால் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். எரிபொருள் வினியோகம் முழுமையாக சீரடைந்துள்ள நிலையில், விலை உயர்வு அழுத்தமும் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சர்வதேச சூழல் மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைப்பட்டால் மீண்டும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version