இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோகித் சர்மா, ஒருநாள்  கிரிக்கெட் போட்டிகளில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை நேற்று படைத்துள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே ‘அதிக வயதில் விளையாடிய வீரர்’ என்ற பெருமையை அவர் தற்போது பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்கிய போது இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். நேற்று களமிறங்கும் போது அவரது வயது 39 ஆண்டுகள் 79 நாள்கள் ஆகும். இதன் மூலம், இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் அதிக வயதில் ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் தனதாக்கிக் கொண்டார்.

இதற்கு முன்பு, இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் இந்த சாதனை முன்னாள் ஜாம்பவான் மோகிந்தர் அமர்நாத் வசம் இருந்தது. 37 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த அவரது இந்த சாதனையை, நேற்று ரோகித் சர்மா அதிகாரப்பூர்வமாகத் தட்டிப்பறித்துள்ளார்.

இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ள வேளையில், இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இந்த ஒட்டுமொத்த பெருமை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியிடம் உள்ளது. அவர் தனது 39 வயது 303 நாள்கள் வரை இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டிலும் அதிக வயதில் ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்/வீராங்கனை என்ற சாதனையை இன்னும் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபித்து, தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்து வரும் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் உலகினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version