சென்னை எழும்பூர் நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது சொகுசு கார் ஏற்றி மரணம் ஏற்படுத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் குற்றவாளி என சென்னை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

EMPEE குழுமத்தின் தலைவர் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. இவர் EMPEE நிறுவனத்தின் இயக்குனர் ஆவர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் 22 தேதி சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நள்ளிரவில் மது போதையில் வந்த ஷாஜி தனது சொகுசு காரை ஏற்றி உள்ளார். இதில் 12 வயதான முனிராஜ், இடுப்பு எலும்பு முறிவு மற்றும் வயிறு பகுதியில் ஏற்பட்ட படுங்காயங்களினால் சிகிச்சை பலனின்றி மே 24 அன்று இறந்து விட்டான். இதே போல். வாசு (8), சுப ரஞ்சிதா (7), ராஜா மொகைதீன்,(19) மணி (19) ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதில் ஷாஜி, குமார் உள்ளிட்டோர் மீது கொலையாகாத மரணம், கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை ஏழாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட ஷாஜி அதி வேகமாகவும் மது போதையில் வாகன ஓட்டியது விபத்திற்கு காரணம் என மருத்துவரின் சாட்சியம் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. எனவே ஷாஜியை குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர்கள் அரசு தரப்பு வாதங்களை நிராகரித்து வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகும் தீர்ப்பளித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட ஷாஜி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என அறிவிப்பதாக தீர்ப்பளித்தார். ஆனால் குற்றவாளி ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்க அவருக்கு ஜாமீனில் வெளிவர கூடிய கைது வாரண்ட் பிறப்பித்தும் அவரை வரும் 15 தேதி நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் நடைபெற்று 13 ஆண்டுகளுக்கு பிறகு தொழில் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கபட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version