அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுகவின் உள்கட்சி மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. தொடர் தேர்தல் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கடுமையாகக் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, கட்சி இரு அணிகளாகப் பிரிந்தது. சட்டமன்றத்தில் நடைபெற்ற முக்கிய ஓட்டெடுப்பின்போது, விஜய் தலைமையிலான அரசுக்கு சி.வி.சண்முகம் அணி ஆதரவு தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலை அதிமுகவில் வெளிப்படையான பிளவை உருவாக்கியது. முதலில் சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.க்களும், எடப்பாடி அணியில் 22 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். எனினும், விஜய் அமைச்சரவை விரிவாக்கத்தில் சண்முகம்-வேலுமணி தரப்புக்கு எந்த அமைச்சர் பதவியும் வழங்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பார்த்த முக்கிய பொறுப்புகள் கிடைக்காததால் அந்த அணியினரிடையே அதிருப்தி அதிகரித்தது. இந்தச் சூழலில் ஆறு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பினர். மேலும் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 15 ஆகக் குறைந்தது. எதிர்பார்த்தபடி எடப்பாடி அணியின் பலம் 28 ஆக உயர்ந்தது. இந்தப் பின்னணியில் எஸ்.பி.வேலுமணி சமாதானப் பேச்சுக்கு முன்வந்தார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு நேரில் சென்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இதில் கட்சியை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் வேலுமணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர் வேலுமணி தலைமையில் ஒரு குழு எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேரில் சென்றது.
ஆனால் இந்தக் குழுவில் சி.வி.சண்முகம் இடம்பெறாதது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, விரைவில் அனைவரும் ஒன்றாகச் சபாநாயகரைச் சந்தித்து, சட்டப்பேரவை குழுத் தலைவர் மற்றும் கொறடா பொறுப்பு தொடர்பான கடிதங்களைச் சமர்ப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சமாதான முயற்சி வெற்றி பெறுமா அல்லது அதிமுகவின் பிளவு நீடிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும்.இந்த உள்கட்சி மோதல் அதிமுகவின் எதிர்கால அரசியல் செல்வாக்கைப் பெரிதும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
