சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் வாயு கசிவால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து சல்பர் வாயு கசிவு ஏற்பட்டதால் ராஜாஜி சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டம் போன்ற புகை பரவி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். துறைமுக எல்லையோரமாக உள்ள காமராஜர் சாலை உள்ளிட்ட நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறைமுகத்தில் பல்வேறு தொழில்துறை மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள சல்பர் கெமிக்கல், அதிக வெப்பம் காரணமாக வேதியல் மாற்றம் அடைந்து வெண்மை நிற புகையாக வெளியேறியதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புகைமூட்டம் காரணமாக நடந்து செல்லும் பொதுமக்களுக்கு கண்களில் எரிச்சல், மூச்சுத் திணறல், தொடர் இருமல் மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பலர் முகத்தில் கைக்குட்டைகளை கட்டிக்கொண்டு வாகனங்களில் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிக்கொண்டு பயணிக்கும் காட்சிகள் அப்பகுதியில் வழக்கமாகக் காணப்படுகின்றன. சென்னை தலைமைச் செயலகத்திற்கு அருகிலுள்ள ராஜாஜி சாலை மற்றும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் இந்த வாயு மூட்டம் தெளிவாகத் தெரியும் அளவுக்கு பரவியுள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் பல துறைமுகப் பகுதிக்கு விரைந்தன. ஆம்புலன்ஸ் வாகனங்களும் சுற்றுப்பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் துறைமுகத் தரப்பில் விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், “சல்பர் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு தற்காலிக வேதியல் மாற்றம் மட்டுமே. பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இதனால் நீண்டகால பாதிப்பு ஏதும் ஏற்படாது” என்று உறுதியளித்துள்ளனர். எனினும், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் நடமாட்டத்தில் சற்று மாற்றம் காணப்படுகிறது.
துறைமுகத்தில் பல்வேறு வகையான இரசாயனப் பொருட்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கமான ஒன்று என்றாலும், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் விரிவான விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
