புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வருகை தந்தார். அப்போது, அவர் மழையூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்தத் திடீர் ஆய்வின் போது, மருத்துவமனையின் வார்டுகளுக்கு நேரில் சென்ற அமைச்சர், அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், மருந்து மாத்திரைகளின் இருப்பு மற்றும் தடையற்ற மருத்துவ சேவை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்த அமைச்சர் முகமது பர்வேஸ், மருத்துவமனையில் தங்களுக்கு உரியச் சிகிச்சை கிடைக்கிறதா என்றும், ஏதேனும் குறைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். மருத்துவமனையின் தூய்மை மற்றும் மருத்துவர்களின் கனிவான அணுகுமுறை உள்ளிட்ட நிறை, குறைகளை அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்து, தரமான சிகிச்சையைத் தொய்வின்றி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version