புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய ஜனாதிபதியின் ‘கலர்ஸ்’ (President’s Colours) விருதை வழங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, அர்ப்பணிப்புமிக்க சேவை மற்றும் தன்னலமற்ற தியாகத்தைப் பாராட்டும் வகையில், இந்திய ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமான ஜனாதிபதியின் ‘கலர்ஸ்’ விருது புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது, பாதுகாப்புப் படையினருக்கான மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த விருதை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூலை 25-ஆம் தேதி புதுச்சேரி வர திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் டெல்லியில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவர் புதுச்சேரி வருவார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதுச்சேரி போலீஸ் மைதானத்தில் பிரமாண்ட அணிவகுப்பு மற்றும் விருது வழங்கும் விழாவுக்கான பணிகள் வேகமடைந்துள்ளன. பொதுப்பணித்துறையினர் மைதானத்தின் முகப்பு, பார்வையாளர் அரங்கம் மற்றும் அணிவகுப்புப் பாதைகளை சீரமைத்து அழகுபடுத்தி வருகின்றனர். மேலும், இந்திய ஒற்றுமையின் அடையாளமான சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவப்படம் மற்றும் புதுச்சேரியின் அதிகாரப்பூர்வ முத்திரையும் மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. விழாவிற்குப் பிறகு புதுச்சேரி காவல்துறையினர் தங்களது சீருடையின் இடது கைப்பகுதியில் ஜனாதிபதியின் ‘கலர்ஸ்’ விருதைக் குறிக்கும் பிரத்யேக சின்னத்தை அணியும் சிறப்பையும் பெற உள்ளனர்.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version