தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டணிக் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்திற்கு ஒருமனதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் மாநில வாரியான தொகுதி ஒதுக்கீட்டை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐ-எம்) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். எனினும், திமுக மற்றும் அதிமுக இக்கூட்டத்தைப் புறக்கணித்தன.

அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும் என எம்.பி.க்கள் வலியுறுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களின் உரிமைகளை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையில், மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியமில்லை என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார். மேலும், 543 என்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் தேவையில்லை. அதேபோல, தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் எந்த மாற்றமும் தேவையில்லை.

தேர்தல் ஆதாயத்திற்காகவே பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த மறுவரையறையை முன்னெடுக்கிறது. இந்தத் திட்டத்தைக் கைவிட்டு, தற்போதைய ‘தொகுதி மறுவரையறை தடையை’ மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தொகுதி மறுவரையறைத் திட்டம் கைவிடப்பட வேண்டும்; தற்போதைய 543 தொகுதிகள் மற்றும் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதி ஒதுக்கீடு அப்படியே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனைத்து மாநிலங்களுக்கும் தலா 50 சதவீத இடங்களை அதிகரிக்கும் யோசனையோ அல்லது மக்கள்தொகை அடிப்படையில் எண்ணிக்கையை உயர்த்தும் நிலைப்பாடோ கூடாது. திமுக மற்றும் அதிமுக இக்கூட்டத்தைப் புறக்கணித்த போதிலும், அவர்களும் இந்தத் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறியதாவது, பாராளுமன்றத்தின் அளவை அதிகரிப்பது ஜனநாயகத்தின் தரத்தை மேம்படுத்திவிடாது. மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543-ஆகவே முடக்கப்பட வேண்டும் என்பதிலும், தமிழ்நாட்டிற்கு 39 இடங்கள் தொடர வேண்டும் என்பதிலும் நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம் என்றார்.

இதேபோல், ஜோதிமணி எம்.பி கூறியதாவது, “எந்த வடிவத்தில் கொண்டு வரப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் 50 சதவீத இடங்களை அதிகரிப்பது உட்பட, மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா பேரழிவை ஏற்படுத்தும். அதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version