இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு மிக உயர்ந்த ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும்,அமோனியா கசிவு தொடர்பான அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொழிற்துறையில் தமிழ்நாடு முன்னேறி வருவதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலைத் தளங்களிலிருந்து உலக நாடுகள் வரை, தமிழ்நாடு ஒரு குறிக்கோளுடன் தொடர்ந்து முன்னேறி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26 நிதியாண்டில், இந்தியாவின் முதல் 10 ஏற்றுமதி மாநிலங்களில் தமிழ்நாடு மிக உயர்ந்த ஏற்றுமதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், இதன் ஏற்றுமதி 13.7% அதிகரித்து, 52.17 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதியில் மாநிலத்தின் பங்கு 11.9%-லிருந்து 13.4%-ஆக அதிகரித்துள்ளது. இது, நாட்டின் உலகளாவிய வர்த்தக இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாட்டின் விரிவடைந்து வரும் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தொழிற்துறைச் சிறப்பு, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள் மற்றும் மீள்திறன் கொண்ட வணிகச் சூழல் ஆகியவற்றால் உந்தப்பட்டு, தமிழ்நாடு வெறும் பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை; அது உலகிற்கு நம்பிக்கை, திறன் மற்றும் போட்டித்திறனை ஏற்றுமதி செய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர்  ச. ஜோசப் விஜய்  முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version