சென்னை: மதுபான நுகர்வால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து டாஸ்மாக் மதுக்கடைகளில் எச்சரிக்கை விளம்பரப் பலகைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கே.கவுரி கிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், பண்ருட்டி பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட கல்லீரல் மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களில் 59 சதவீதத்தினருக்கு கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் தொடர்ந்து மதுபானங்களை நுகர்வதே இத்தகைய உடல்நலக் கோளாறுகளுக்கு முக்கிய காரணம் என மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பண்ருட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபான நுகர்வால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், கல்லீரல் சிரோசிஸ், புற்றுநோய் உள்ளிட்ட அபாயங்கள் குறித்த எந்தவித எச்சரிக்கை விளம்பரங்களும் இல்லாதது தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலர் மற்றும் டாஸ்மாக் நிறுவனம் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தது.
மருத்துவர் கவுரி கிருஷ்ணன் தனது மனுவில், மதுவின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும், கடைகளில் பெரிய அளவிலான எச்சரிக்கை பலகைகள் வைப்பதன் மூலம் இளைஞர்கள் உள்ளிட்டோர் மது அருந்துவதைத் தவிர்க்க உதவும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கின் முடிவு மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பரங்கள் இடம்பெற வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
