காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதால் தமிழகத்தின் முக்கிய 4 மாவட்டங்களில் மதுக்கடைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது காலி பாட்டில்களைக் கையாளுவதற்குக் கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தங்களது இந்த நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்ததைக் கண்டித்து, ஊழியர்கள் தற்போது இந்த அதிரடிப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தற்போது வரை டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் கடைகளும் இன்று முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் கடைகள் பூட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

அடைக்கப்பட்ட கடைகளின் பணியாளர்கள், மாவட்ட மற்றும் மண்டல டாஸ்மாக் அலுவலகங்களை நோக்கித் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. திருப்பூரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கடைகள் திறக்கப்பட மாட்டாது. இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாகத் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு அரசுக்குச் சுமார் 2 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும்” என்று எச்சரித்துள்ளனர்.

நான்கு மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாகப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் ஊழியர்களுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version