இந்து சமய அறநிலையத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லஞ்ச விவகாரம், துறையின் நிர்வாக நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தஞ்சாவூர் மண்டல இணை ஆணையராகப் பணியாற்றிய ஜோதிலட்சுமி என்பவர், கோயில் திருப்பணிக்கான நிதி விடுவிப்புக்கு 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கோரியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அவரது நெருங்கிய தோழி கிரிஜா உட்பட இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் அம்மாபேட்டை அருகிலுள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான வன்மீகநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் புதுப்பிப்புப் பணிகளுடன் தொடர்புடையது. குடமுழுக்கு விழாவுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திருப்பணிகளுக்கான டெண்டரை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மதியழகன் பெற்றிருந்தார். பணிகளை மேற்பார்வையிட்டு வந்த அவரிடம், பணத் தொகையை விடுவிக்கும் பொருட்டு ஜோதிலட்சுமி 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.

மேலும், “பணம் கொடுத்தால்தான் நிம்மதியாக வேலை செய்ய முடியும்; இல்லையெனில் பிரச்னைகள் வரும்” என மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மதியழகன் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். போலீஸ் அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வைத்து பொறி அமைத்தனர். நேற்று மாலை அறநிலையத் துறை அலுவலகத்துக்கு வந்த மதியழகன், கிரிஜா மூலம் அந்தப் பணத்தை ஜோதிலட்சுமியிடம் ஒப்படைத்தார்.

முன்னரே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழு (டி.எஸ்.பி. அன்பரசன் தலைமையில்) இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தது. ஜோதிலட்சுமி மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கோயில் அறங்காவலர்கள் நியமனம், திருப்பணிகள் உள்ளிட்டவற்றில் முறைகேடாக பணம் வசூலித்ததாகவும், கீழ்மட்ட அதிகாரிகளிடம் மாதாமாதம் கட்டாயத் தொகை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த முழு செயல்பாட்டுக்கும் “நிழல்” போலச் செயல்பட்டவர் அவரது நெருங்கிய தோழி கிரிஜா.

அரசு பதவி ஏதும் இல்லாத கிரிஜா, இணை ஆணையரின் அறையிலேயே அமர்ந்து நிர்வாகத்தில் தலையிட்டு, அதிகாரத்தை வரம்பு மீறிச் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கீழ்மட்ட ஊழியர்களைத் துன்புறுத்தியதாகவும் புகார்கள் உள்ளன. இந்தச் சம்பவம் அறநிலையத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிலட்சுமியின் மற்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் தனியாக விசாரணை நடத்த மேலிடம் உத்தரவிட்டுள்ளது. கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடையே நேர்மை குறித்த விழிப்புணர்வை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version