அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்” என உருக்கமாக வீடியோ வெளியிட்டு, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் காவல் எல்லைக்குட்பட்ட பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவர் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணியின் இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்ததுடன், திருப்பனந்தாள் கடைவீதியில் பூக்கடையும் நடத்தி வந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், நித்யஸ்ரீ என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் மற்றும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக மகேந்திரன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தீக்குளிப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரண்டு வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், சிதறிக் கிடக்கும் அதிமுக மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்றும், கட்சியின் எதிர்காலம் குறித்துத் தனக்கிருக்கும் வேதனையையும் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், “எனது மறைவிற்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்த வேண்டும், அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்” என்றும் அந்த வீடியோவில் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, மகேந்திரன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பனந்தாள் காவல் துறையினர், உயிரிழந்த மகேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version