இன்ஸ்டாகிராம் காதலை கைவிட மறுத்த இளம் பெண்ணை அவரது சகோதார் கொலை செய்ததும், அதற்கு அவரது தாய் உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கயத்தார் தாலுகாவில் உள்ள தெற்குமயிலோடை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அபிசெல்வி மர்மமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அவரது சகோதரர் சிவஞானம் கொலை செய்ததாகவும், தாய் எஸ்தர் பாலின் உடந்தையுடன் நடந்ததாகவும் போலீசார் விசாரணையில் கண்டறிந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

அபிசெல்வி கடந்த மூன்று ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் வாயிலாக தீவிர காதல் உறவில் இருந்து வந்துள்ளார். இந்த உறவு குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரியவந்தது. அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் பெற்றோர் இக்காதலை கடுமையாக எதிர்த்தனர். குடும்ப அழுத்தத்தால் மனமுடைந்த அபிசெல்வி, அப்போது வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், குடும்பத்தின் தடையை மீறி அவர் ஹரி பிரசாத்துடன் தொடர்பைத் தொடர்ந்து வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, அபிசெல்வி தனது செல்போனில் ஹரி பிரசாத்துடன் பேசிக் கொண்டிருந்ததை அண்ணன் சிவஞானம் பார்த்து கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவஞானம் தங்கையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அபிசெல்வியின் மன உளைச்சலை அதிகப்படுத்தியது. அதன் பிறகு, வீட்டில் இருந்த கெமிக்கல் பொடியை தண்ணீரில் கலந்து குடித்த அபிசெல்வி, பின்னர் அறைக்குள் சென்று சீலிங் ஃபேனில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கயத்தார் போலீசார் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடலில் பல இடங்களில் காயங்கள் மற்றும் தாக்கப்பட்ட அறிகுறிகள் இருந்ததை அடுத்து போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். விரிவான விசாரணையில், அபிசெல்வியை சகோதரர் சிவஞானம் தாக்கிக் கொலை செய்ததும், தாய் எஸ்தர் பாலும் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இளம் பெண்ணின் இன்ஸ்டாகிராம் காதலை ஏற்க மறுத்த குடும்பத்தின் செயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடக காதல்கள் மற்றும் குடும்ப அங்கீகாரம் சார்ந்த பிரச்னைகள் இன்றும் பல இளைஞர்களை பாதிப்பதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்கின்றனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version