கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருந்த சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம், வரும் ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மாதந்தோறும் நடைபெறும் இக்கூட்டம், கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது நடைபெற்றது. அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் தவெக வெற்றி பெற்று, ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசு அமைந்த பின்னரும், கடந்த மே மாதத்தில் மாமன்றக் கூட்டம் நடத்தப்படவில்லை.

சென்னையிலுள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 14-ஐ தவெக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய ஆட்சி அமைந்த பிறகும் சென்னை மேயர், துணை மேயர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. மேலும், புதிய அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தினால்தான் மாமன்றக் கூட்டம் தள்ளிப்போகிறது என்ற பேச்சுகளும் உலா வந்தன.

இத்தகைய அரசியல் சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் மத்தியில், ஜூன் மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இக்கூட்டம் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version