குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் களியக்காவிளை பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய கனிம வள லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், இந்தத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று, லாரிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் வகையில் ஊர்வலமாக செல்லப் போவதாக அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கேரள மாநில எல்லைப் பகுதியிலிருந்து லாரிகளுடன் ஊர்வலமாக வந்த உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை, தமிழக எல்லைக்குள் நுழைய போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கனிம வள லாரிகள் கேரளாவுக்குச் செல்ல முடியாததால், வங்கிகளில் வாங்கிய வாகனக் கடன்களின் மாதத் தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குடும்பங்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், நான்கு வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் வரை தற்போதைய தடை நீடிக்கும் என்று அதிகாரிகள் கூறிவருவதாகவும், அதற்கு மாற்றுத் தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, போக்குவரத்து மீண்டும் சீரானது.

