திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் முதல் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். நிதி அமைச்சர் மரிய வில்சன் 151 நிமிடங்கள் வாசித்த இந்த பட்ஜெட் உரைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த அரசு அமைந்து கிட்டத்தட்ட 100 நாட்களாகிவிட்டது. இந்த 100 நாட்களின் மதிப்பெண் பூஜ்யம். இந்த பட்ஜெட்டும் மிகப்பெரிய ஜீரோதான்” என்று கூறினார்.
தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்பதை ஒப்புக்கொண்டாலும், அவற்றை எப்போது செயல்படுத்துவது என்ற அட்டவணையையாவது வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் பட்ஜெட்டில் அப்படியொரு அறிவிப்பு இல்லை என்றார். மாறாக, திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி ‘வெற்றி’ என்ற முன்னொட்டைச் சேர்த்து ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டம், அயோத்திதாசர் வாழ்விட மேம்பாடு திட்டம், ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ஆகியவை அனைத்தும் திமுகவின் சாதனைகள் என்றும், அவற்றுக்கு ‘வெற்றி’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அன்புச்சோலை திட்டம் முதியோர் பொழுதுபோக்கு மையங்களாகவும், லேப்டாப் திட்டம் வெற்றி மடிக்கணினியாகவும், கலைஞர் கனவு இல்லம் வெற்றி வீடு திட்டமாகவும், மாடல் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகவும், நன்னிலம் திட்டம் மண்ணின் மகள் திட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டினார்.
“ஆட்சிக்கு வரும்போது மாற்றம், மாற்றம் என்று சொன்னார்கள். என்ன மாற்றம்? பெயர் மாற்றம் மட்டும்தான்” என்று கேள்வி எழுப்பினார். தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில், இப்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் எனக் குறைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
கல்வி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டிக்கக்கூட வக்கில்லாத அரசு என்றும், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பயிர்க்கடன் தள்ளுபடி முழுமையாகச் செய்யப்படவில்லை என்றும் அவர் சாடினார். சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்ட உதயநிதி, ஐந்து வாரங்களில் நான்கு லாக் அப் மரணங்கள், ஐந்து சாதிய ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகவும், குழந்தைகள், பெண்கள், முதியோருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு, அரிசி விலை உயர்வு குறித்து முதலமைச்சர் பதிலளிக்க மறுப்பதாகவும், அவை முன்னவர் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் கூறி தப்பித்துக்கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார். மகளிர் உதவித்தொகை குறித்து பட்ஜெட்டில் ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

